திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திரிகடுகம். அந்நூலின் 36ஆவது பாட்டு,
ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு – திரிகடுகம் – 36
http://www.tamilvu.org/slet/l2200/l2200uri.jsp?song_no=36&book_id=43&head_id=43&sub_id=1054
(இ-ள்.) ஊன் உண்டு - ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு - உயிர்களிடத்தில், அருள் உடையேம் - தயவுடையோம், என்பானும் - என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி - தான் (யாதொரு முயற்சிக்கும்) உடன்படாமல், வினை ஆக்கும் - ஊழ் (எல்லாம்) செய்யும், என்பானும் - என்கிறவனும்; காமுறு - (ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய) விரும்புகின்ற, வேள்வியில் - யாகத்தில், கொல்வானும் - (ஓருயிரைக்) கொலை செய்வானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், தாம் கண்ட ஆறு - தாங்கள் அறிந்தபடியே, தாம் அறிவர் - தாங்கள் அறிந்தவராவர்; (எ-று.)
(க-ரை.) தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று
தின்றும் எனக்கு உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வதும், எல்லாம்
விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி இருப்பதும், இம்மைப்
பயன் கருதிச் சில சடங்குசெய்து உயிரைக் கொல்வதும் நூல்களின்
உண்மை யுணராதவர் செய்கைகளாம்.
உயிர்கட்கு : உருபு மயக்கம். உடன்பாடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
வினை - ஊழ்; முன்வினைப்பயன் ஒருவன் தனக்குள் தானொன்றைக்
கருதும்போது தன்னைத் தன்மைப்பன்மையாக வைத்துக் கூறுதல்
மரபாதலால் உடையேம் என்பது வழாநிலை. காமுறு வேள்வியாவது
- தான் விரும்பிய பொருளை அடையும் பொருட்டுச் செய்யப்படும் யாகம்.
அறநூலின் கருத்தை அறிவுடையோர்பாற் கேட்டு உண்மை
உணர்ந்திலராதலால், தாங் கண்டவாறு தாம் அறிவர் எனப்பட்டது.
ஆக்கும் என்ற குறிப்பால் வினை ஊழை உணர்த்தியது.
=====================================
என் குறிப்பு:
1.”தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும் எனக்கு
உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வது” – பெளத்த தர்சனம்
2.”எல்லாம் விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி
இருப்பதும்” – ஆசிவக தர்சனம்
3.”இம்மைப் பயன் கருதி வேள்விகளில் சில சடங்கு செய்து உயிரைக்
கொல்வதும்” – வேத தர்சனம்
மேலே கூறிய மூன்று தரிசனங்களை மேற்கொண்டவர்கள், நூலின்
உண்மையை உணராதவர்கள் என்பது பாடம்.
இரா.பானுகுமார்,
சென்னை
1 comment:
This is really very useful aritcle,
Keep it up.
Thanks.
A.Selvamani
Post a Comment